யாழில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை பகுதி 38 கீழ் அரச காணிகளாக்கி பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிக்...
யாழில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை பகுதி 38 கீழ் அரச காணிகளாக்கி பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக பல தனியார் காணிகள் நிலஅளவைத் திணைக்களத்தினால் அளவிடும் பணிகள் மேற்கொள்ள வந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனை தந்திரமான முறையில் கையாள்வதற்காக காணி சுவீகரிப்பு பகுதி-5 கீழ் அளவிடும் காணிகளின் விவரங்கள் காட்சிப் படுத்தப் பட்டு வந்தது.
இந்நிலையில் மக்கள் செல்ல முடியாத உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அளவு ஈடு செய்வதற்காக காட்சிப்படுத்தப்படும் விவரங்களை மக்கள் பார்வையிட முடியாத வகையில் காட்சிப்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது குறித்த விடயம் நடைபெற்று முடிந்ததாக பகுதி 38 கீழ் தனியார் காணிகளை அரச காணிகளாக்கும் முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்று கூடி எதிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதோடு அதனை அறிந்து கொள்ளவும் முடியாது.
ஆகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தி காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.