வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பை ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவ...
வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பை ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (06) தீர்ப்பை அறிவிக்கவிருந்தது.
குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, தீர்ப்பை தயார் படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதிபதி கிஹான் குலதுங்க அறிவித்தார்.
கடந்த 2012 நவம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று STF அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து, கைதிகள் வசம் இருந்த சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, கைதிகளினால் சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கு உடைக்கப்பட்டு சிறைச்சாலையிலுள்ள துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, மோதல் ஏற்பட்டதாகவும், மோதலை அடக்குவதற்காக இராணுவத்தின் மூன்று படைப்பிரிவுகள் சிறைக்குள் அனுப்பப்பட்டதாகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலை கட்டுப்படுத்தும நடவடிக்கையின் போது, இந்த வழக்கின் பிரதிவாதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கைதிகளை சிறைச்சாலையின் தொழிற்பேட்டை என அழைக்கப்படும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்தமை, அதற்கு சதி செய்தமை மற்றும் சட்டவிரோதமாக மக்கள் கூட்டமாக இணைந்து செயற்பட்டமை உள்ளிட்ட 33 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.