இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு கனடா செல்லும் நோக்கில் படகு மூலம் பயணித்து படகில் ஏற்பட்ட உடைவு காரணமாக டிக்கோகார்ஸியா தீவில் உள்ள அமெரிக...
இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு கனடா செல்லும் நோக்கில் படகு மூலம் பயணித்து படகில் ஏற்பட்ட உடைவு காரணமாக டிக்கோகார்ஸியா தீவில் உள்ள அமெரிக்க கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு தற்போதுவரையில் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தமக்கு பிரித்தானிய அரசு தஞ்சம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் மன்னாரில் இருந்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான 2 மாத இடைவெளியில் 6 படகுகளில் பயணித்த 27 பேர் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியை அண்டிய கிராமத்தில் ஊர் மக்களால் அவயம் அளிக்கப்பட்டனர் (அவர்களின் பாதுகாப்பு கருதி பெயர், முகவரி தவர்க்கப்படுகின்றது). அவ்வாறு சென்ற 27 பேரும் இந்தியாவிற்கு ஏற்கனவே அகதிகளாகச் சென்று மண்டபம் உள்ளிட்ட அகதி முகாம்களில் இருந்த 60 பேர் உட்பட மொத்தம் 87 இலங்கையர் படகு மூலம் கனடா செல்ல திட்டமிட்டனர். இதற்காக தலைக்கு தலா 10 லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு பின்னர் 10 தொடக்கம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் செலுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் மன்னாரில் இருந்து இந்தியாவிற்குச் செல்ல நம்மவர்களிற்கும் 50 ஆயிரம் ரூபாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பணத்தைச் செலுத்தி சிறு எண்ணிக்கைகளாக சென்றோர் ஒன்று சேர்க்கப்பட்டு தமிழ்நாடு முகாம்களில் இருந்தவர்களும் இணைக்கப்பட்டு கனடாவிற்கான பயண ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்தியாவின் மீன்பிடி ட்ரோலர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் படகிற்கான முழுப் பணத்தையும் செலுத்தியே படகை கொள்வனவு செய்துள்ளனர்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட படகு இந்தியாவின் கன்னியாகுமரியை அண்டிய கடற்கரையில் இருந்து 2021-09-21 அன்று புறப்பட்டுள்ளது. இவ்வாறு புறப்பட்ட படகில் பயணித்தவர்கள் பயணிப்பதற்கு இரு தினங்களின் முன்பு இலங்கையில் உள்ள தமது உறவுகளிடம் தொலைபேசியில் உரையாடியது மட்டுமன்று இனி 30 நாட்களின் பின்பே உரையாட முடியும் எனவும் தகவல் வழங்கியுள்ளனர்.
அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து புறப்பட்டவர்கள் 2021-10-03 அன்று மாலைதீவையும் தாண்டி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்கோகார்ஸியா தீவை அண்மித்த கடலில் பயணிக்கும்போது படகில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்ணுக்குத் தெரிந்த தீவுக்கு புகை சமிக்கை வழங்கியுள்ளனர். நீண்ட நேரமே ஒரே இடத்தில் ஓர் படகு நிற்பதனையும் அதில் இருந்து சமிக்கை வருவதனையும் அவதானித்த கூட்டுப் படையினர் படகை அண்மித்தபோது படகு மூழ்கும் நிலமையில் காணப்பட்டதனால் அதில் இருந்த ஈழ அகதிகளை மீட்டு தமது தீவிற்கு கொண்டு சென்றனர். இதன்போது அதில் இருந்த 87 பேரும் காப்பாற்றப்பட்டபோதும் உடமைகள் எவையும் மீட்கப்படவில்லை.
இவ்வாறு தீவிற்கு கொண்டு செல்லப்பட்ட விடயம் 2021-10-05 அன்று பத்திரிகையில் முதன் முதலாக செய்தி வெளியிட்டபோதும் சிலர் அதனை மறுத்தும் வந்தனர். இதனால் 2021-11-25 அன்று தீவில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் 60பேரின் பெயர் விபரங்கள் பத்திரிகையில் மீண்டும் வெளியிட்டது. 87 பேர் பயணித்தபோதும் 60 பேரின் பெயர் விபரம் மட்டும் எவ்வாறு வெளிவந்தது எனத் தேடியபோது தமிழ்நாடு முகாமில் இருந்து சென்ற 60பேரின் பெயர் பட்டியலே அது என உறுதியானது.
இந்தக் காலத்தில் தீவில் அகப்பட்டவர்களின் உறவுகள் நீண்ட தேடுதலில் ஈடுபட்டும் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை.
இதனால் மன்னாரில் உள்ள உறவுகள் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் பிரித்தானியத் தூதரகம், மாலைதீவு தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டனர். இதன் பின்பு 2022 ஆண்டு ஜனவரி மாதம் முதன் முதலாக தீவில் அகப்பட்டுள்ள ஈழ அகதிகள் சென்மதி தொலைபேசி ஊடாக உறவுகளுடன் 3 நிமிடம் உரையாட அனுமதிக்கப்பட்டனர்.
இதன்மூலம் படகில் சென்ற 89 பேரும் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டபோதும் எந்த நாட்டின் பொறுப்பில் உள்ளோம் என்பது மட்டும் எவருக்குமே தெரியவில்லை. ஏனெனில் டிக்கோகார்ஸியா தீவில் எந்நவொரு மக்களும் கிடையாது. அதேநேரம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாட்டுப் படைகளும் நிலைகொண்டுள்ளனர். இதில் பிரித்தானியப் படைகள் இந்த விடயத்தை மனிதாபிமானமாக கையில் எடுத்து அனைவரும் தங்குவதற்கான கொட்டகைகள் அமைத்து உணவு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதற்கு அப்பாலான தேவைகளோ குறிப்பாக மிக முக்கியமான வைத்திய வசதிகளோ கிடையாது. இதேநேரம் 89 பேரில் பெண்களுடன் சிறுவர்களும் உள்ள நிலமையில் கல்வி வசதியும் கிடையாது. இதனால் இவர்களில் 26 வயதுடைய ஓர் இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டு சுய சிந்தனை ஏதும் இன்றி இருப்பதனால் பராமரிப்பு பெரும் சிரமத்தை உண்டு பண்ணியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர் திருமணமாகாதவர் இவரது உடன் பிறந்த சகோதரங்களோ அல்லது தாய், தந்தையரோ உடன் பயணிக்காதபோதிலும் இரண்டாம் நிலை உறவுகள் சிலர் உடன் இருக்கும்போதும் இந்த மனநலம் பாதித்த இளைஞனை நாட்டிற்கு அதாவது மன்னாரிற்கு திருப்பி அனுப்பும் முயற்சிகளும் இடம்பெறுகின்றது. அந்த முயற்சிக்காக மன்னார் பொலிசார் வீட்டிற்குச் சென்று தாயாரிடம் விபரங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இவை தொடர்பில் கனடாவிற்கு பயணத்திவர்களில் ஒருவலின் மனைவி தற்போது மன்னாரில் வசிப்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தமது பெயர் அடையாளத்தை தெரிவிக்க தங்கினர்,
அதனால் பெயர் முகவரி வெளியிடவில்லை என்ற உறுதிமொழியின் அடிப்படையில் விபரங்களை கோரியபோது 8 லட்சம் ரூபாவை படகிற்கு செலவு செய்த அதேநேரம் ஒரு ஆண்டாக பெரும் நெருக்கடிகளுடன் தங்கி தற்போது யாரும் அற்ற தீவில் இருக்கும் நிலையில் ஒரு நாடு தஞ்சம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு மாறாக திருப்பி அனுப்பினால் மனமுடைந்து என்ன முடிவாகுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளோம் என்றார்.
நீண்ட இழை போல வளைந்து கிடக்கும் தீவின் காட்சி
அதேபோன்று திருமணமான பெண் பிள்ளை அவரது கணவருடனும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு சென்றதோடு மகனுமாக 4 உறவுகள் பயணித்த தாயாரைத் தொடர்புகொண்டோம். இங்கு வாழவே விருப்பம் இல்லை என பல ஆண்டுகளாகவே கூறிவந்தமையினால் இருக்கிறதை விற்றது மட்டுமன்றி 8 லட்சம் ரூபா கடனையும் வாங்கி கொடுத்தேன். மிகுதிப் பணத்தை கணவர் வழங்கினார் ஆனால் இரண்டும் கெட்ட தீவில் ஒரு தொலைபேசிகூட இல்லாத தீவில் தவிக்கின்றனர். இதனால் ஏதாவது நாடு அவர்களின் அவலத்தை புரிந்து அவயம் அளிக்க வேண்டும் என்பதே எமது அவா. அதிலும் குறிப்பாக பிரித்தானியா இவர்கள் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் ஓர் முடிவை எடுக்க வேண்டும் என விரும்புகின்றோம் என்றவரிடம் கணவர் எங்கு தொழில் புரிகின்றார் என்றபோது அவுஸ்திரேலியவில் எனப் பதிலளித்தார்.
இவ்வாறு தீவில் அகப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவலை அண்மையில் வெளியிட்டுள்ள ஆசிய பசுபிக் அகதிகள் தஞ்சம் கோரிகளிற்கான அமைப்பு இந்த அகதிகளை பொறுப்பேற்க பிரித்தானியாவும் மறுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இறுதியாக 2022-02-22 அன்று மாலையில் அனைவரும் இலங்கையில் உள்ள உறவுகளுடன் தொலைபேசியில் உரையாட அனுமதிக்கப்பட்டனர். இம்முறை 3 நிமிட வரையறை தளர்த்தப்பட்டு 7 நிமிடமாக அதிகரிக்கப்பட்டதோடு பெண்கள் சிறுவர்கள்கொண்ட குடும்பங்கள் 10 நிமிடம் வரையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது உறவுகளிடம் தாம் மீளத் திரும்பிவர விரும்பவில்லை என்பதனை வலியுறுத்தியதோடு போட்டிருந்த உடுப்பைத் தவிர அனைத்தையும் இழந்த தமக்கு தற்போது தேவையானவற்றை பிரித்தானிய அரசே வழங்கியதாகவும் இதனால் தமக்கான தஞ்சக் கோரிக்கையினையும் அதே மனிதாபிமானத்துடன் பிரித்தானியா அணுக வேண்டும் என தீவில் தங்கியுள்ளவர்களும் இலங்கையில் உள்ள உறவுகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.