உக்ரைன் நாட்டை விட்டு அந்நாட்டு அதிபர் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளநிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறி...
உக்ரைன் நாட்டை விட்டு அந்நாட்டு அதிபர் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளநிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறிய பதில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நேட்டோவில் அமைப்பில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. ஒரே நாளில் செர்னோபில் அணு உலை உட்பட உக்ரைனின் பெரும்பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளன. குறிப்பாக அந்நாட்டு தலைநகர் கீவில் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே கடுமையான போர் நீடித்து வருகிறது.
அதிபர் ஜெலென்ஸ்கி தலை நகரில்தான் தங்கியுள்ளார். இதையடுத்து அவரை உடனடியாக தலைநகரை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது? “நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன். எங்களுக்கு தேவை ஆயுதம்தான். பயண டிக்கெட் இல்லை. நான் வர மாட்டேன்.
உக்ரைன் படைகள் நாடு முழுக்க குவிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் மக்களோடு இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்லவில்லை. படைகள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் களத்தில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டை காப்பாற்றுவோம். இந்த போர் அவசியம் இல்லாதது. ஆனால் நீங்கள் திருப்பி தாக்கினால் நாங்களும் தாக்குவோம். அதற்கு பெயர் போர் அல்ல. தற்காப்பு. நாங்கள் எங்களை தற்காப்போம் என்பதை மறக்க வேண்டாம்.
எங்களுக்கு வெறும் வார்த்தைகள் மூலம் அனுதாபம் தரும் நாடுகளை விட உண்மையாக உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி. நாங்கள் தனியாக இருக்கிறோம். ஆனால் ரஷ்யாவால் எங்களின் எதிர்காலத்தை, எங்களின் குழந்தைகளை, எங்களின் உயிரை எடுக்க முடியாது. அதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதையடுத்து உக்ரைன் அதிபர் கொஞ்சம் கூட மனதளவில் தளரவில்லை என்றும் மிகவும் உறுதியாடும், உற்சாகத்தோடும் இருப்பதாகவும் அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.