நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றி ப...
நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்தனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்ப முதலே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றனர்.
சுவாமி சங்கரதாஸ் அணியின் ஐசரி கணேஷைவிட 688 வாக்குகள் அதிகமாக பெற்று விஷால் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1,612 வாக்குகளும், கருணாஸ் 1,605 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதேவேளை, நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளைக் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.