நிலத்தடி நீரில் மலக்கழிவுகள் கலப்பதால் யாழ்ப்பாணம் மாநகர மக்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா...
நிலத்தடி நீரில் மலக்கழிவுகள் கலப்பதால் யாழ்ப்பாணம் மாநகர மக்கள் பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை தந்து பார்வையிட்டிருந்தார். அமெரிக்கத் தூதுவரின் வருகை மற்றும் அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
அமெரிக்கத் தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பல்வேறு விடயங்களை எடுத்துக்கூறியுள்ளேன். குறிப்பாக நூலக செயற்பாடுகள் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார். அத்தோடு நூலகத்தில் சகல பிரிவுகளையும் அமெரிக்கத் தூதுவர் பார்வையிட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பொதுசன நூலகமானது எரித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் அமெரிக்கத் தூதுவருக்கு எடுத்துக்கூறினோம்.
அத்தோடு எமது சில வேண்டுகோள்களையும் அமெரிக்கத் தூதுவரிடம் நாங்கள் முன்வைத்துள்ளோம். குறிப்பாகத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அமெரிக்காவிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்தோம்.
அத்தோடு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மின்சார வசதியுடன் நவீன மயப்படுத்த உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும், யாழ்ப்பாணம் மாநகரத்திற்கே உரிய மிக முக்கிய விடயமாக பாதாள சாக்கடைத் திட்டம் காணப்படுகின்றது.
அதாவது கழிவு வாய்க்கால் ஊடாக மலக்கழிவுகள் அகற்றப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் நிலத்தடி நீர் மாசு அடைவதோடு எதிர்காலத்தில் நிலத்தடி நீர் கேள்விக்குறியாக அபாயமான கட்டத்தை நோக்கிச் செல்கின்றது என்பதை அமெரிக்கத் தூதுவருக்கு எடுத்துரைத்துள்ளேன்.
இதேவேளை, திண்மக் கழிவு அகற்றல் திட்டம் தொடர்பிலும் எடுத்துரைத்தேன். அதாவது திண்மக்கழிவுகள் அகற்றும் திட்டத்தை மேம்படுத்துவதற்கு உரிய பொறிமுறைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். குறிப்பாக யாழ்ப்பாணம் மாநகர சபையால் பசளை தயாரிக்கப்படும் இடத்தில் உற்பத்திக்கு ஏற்றவகையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில், அதிகளவில் பசளைகளை உற்பத்தி செய்வதன் ஊடாக கழிவுகளை அப்புறப்படுத்த முடியும் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளேன்.
திண்மக் கழிவு அகற்றல் திட்டம் ஊடாக சுத்தமான நகரமாக யாழ்ப்பாணம் மாநகரத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்படுகிறது என்பதை அமெரிக்கத் தூதுவருக்கு எடுத்துக்கூறியுள்ளேன்.
அத்தோடு, யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்களுக்கு உலகளாவிய ரீதியில் எவ்வாறு கழிவு அகற்றல் முகாமைத்துவம் செயற்படுகின்றது என்பது தொடர்பில் பயிற்சிகள் வழங்க உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன். எனது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் வழங்குவதாக அமெரிக்கத் தூதுவர் கூறினார் என்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் து. ஈசன் மேலும் தெரிவித்தார்.