தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என தாம், நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வ...
தமது சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தவிர்க்கும் என தாம், நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவது தொடர்பில் இந்தியா வெளிய்pட்ட கவலையை அடுத்தே இந்த கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டையை நோக்கி வந்துகொண்டிருந்ததாகவும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி அது. ஹம்பாந்தோட்டையை அடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர், சீனக் கப்பலின் திட்டமிடப்பட்ட வருகையை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருவதாக நேற்று கூறியிருந்தார்.
அத்துடன் புதுதில்லி அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை கப்பலின் வருகைக்கு எதிராக இந்தியா ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் ரொயட்டர்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகம், பீய்ஜிங் எப்போதும் ஆழ்கடலின் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்து, தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.