யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்...
யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் எனும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்று(18) கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சந்திப்பினை தொடர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் இன்று நடைபெற்றுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் உள்ள வளாகங்களையும் இணைந்து இந்த ஒன்றியத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தின் அடிப்படையில் வடகிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமாரும் பொருளாளராக யாழ் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த பிரதீபனும் ஊடக பேச்சாளராக யாழ் பல்கலைக்கத்தினை சேர்ந்த இ.தர்சனும் செயற்பாட்டு உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழக மாணவி அனுஸ்திகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன் பின்னராக கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து பல்வாய்ந்த ஒரு அமைப்பாக இதனை உருவாக்கவுள்ளதாகவும் இது காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் சூழ்நிலையிலேயே இந்த மாணவர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்கும் வகையிலும் மாணவர்கள் நலன்சார்ந்த வகையிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.