யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவர்கள் விடுத்த வே...
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தலைமையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பொருத்தமாகயிருக்கும் என்று பிரதி முதல்வர் ஈசன் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகம் எங்கும் பேரெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாட்டு ரீதியாக மௌனித்த பின்னர் வடக்கு - கிழக்கில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளும் தமிழ் உணர்வாளர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்கு - கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜன் அணி மற்றும் மணி அணியினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தலைமையிலான அணியினரும் சில இடங்களில் பொது மக்களும், மாவீரர்களின் உறவினர்களும் மாவீரர் துயிலுமில்லங்களை துப்புரவு செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயத்திற்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு அணியினரும் தனித்தனி ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையிலான அணியினர் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் காட்சிப்படுத்தி மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாவீரர் நாள் வரை அதாவது நவம்பர் 27 ஆம் திகதி வரை தியாகி திலீபன் அவர்களின் நினைவாலயம் முன்பு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
தமிழ் மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவொருபுறமிருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான அணியினர், மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.