இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்படுமா? என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளும...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்படுமா? என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, ஜனாதிபதி தனக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (டிச.06) விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பிய போதே, டக்ளஸ் தேவானந்தா இதனைக் குறிப்பிட்டார்.
விஜித்த ஹேரத் :- ரணில் விக்ரமசிங்க, தற்போது ஜனாதிபதி. அவர் பிரதமராக பதவி வகித்த போது, இந்திய படகுகள் வந்தால் துப்பாக்கி சூடு நடத்தப்படும் என மன்னாருக்கு விஜயம் செய்த போது கூறியிருந்தார். அவர் தற்போது ஜனாதிபதி. உங்களுக்கு அந்த தீர்மானத்தை எடுக்க முடியுமா?
டக்ளஸ் தேவானந்தா :- அவர் எனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்காக செயற்படுகின்றேன்.
டக்ளஸ் தேவானந்தாவின் பதில்
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் கிடையாது எனவும், இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முழுமையான அதிகாரத்தை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாகவுமே தான் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.
சிங்கள மொழியில் கருத்துக்களை பகிரும் ஏற்பட்ட தவறுதலே, இந்த தடுமாற்றத்திற்கான காரணம் எனவும் அவர் கூறினார்.
2015ல் ரணில் வெளியிட்ட கருத்து
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாக 2015ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.