தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை, பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, ஊடகப் பி...
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை, பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, ஊடகப் பிரதானிகள் சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். ஐ.எம்.எவ் மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இது வெறும் ஆரம்பம் தான். ஐ.எம்.எவ் ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஆனால் நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேறவேண்டும். எனவே இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்ட வேண்டும். எனவே முதலில், இது ஒரு கடன் மறுசீரமைப்பு, ஆனால் கடன் மறுசீரமைப்பு மட்டும் அல்ல, நாம் அதை நமது பொருளாதார மறுசீரமைப்பாக மாற்ற வேண்டும்.
முதலில், எங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை உள்ளது. இந்த செயல்முறை மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலமாக இருப்பதோடு, நாம் அரச செலவினங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இது எங்களுக்கு முதன்மை வரவுசெலவுத் திட்ட மேலதிக மற்றும் வருமான அதிகரிப்பை உறுதி செய்கிறது. நாம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் நவீனமயமாக்கப்பட வேண்டும். இலங்கையை பிராந்திய விநியோக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுலாத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை நிச்சயமாக மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.
இன்னும் 25 வருடங்களில் அதாவது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம் ஆகும். நான் திருடர்களைப் பாதுகாக்க வந்ததாகக் குற்றம் சாட்டினார்கள். ஆனால், ஐ.எம்.எவ் உடன் ஆலோசித்து தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைக் கொண்டுவருகிறோம். எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும் இப்படி எதனையும் செய்யவில்லை. நீதியமைச்சர் இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இதனை பாராளுமன்றத்தில் முன்வைத்தோம். இதை யாரும் எதிர்க்க முடியாது. சில புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய சட்டங்கள் சிலவற்றையும் கொண்டுவர பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.