இரண்டாம் இணைப்பு களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பில்...
இரண்டாம் இணைப்பு
களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
களுத்துறை – ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடிகளை கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் ஒன்று நேற்று (06) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மாணவியின் பெற்றோரால் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி நேற்று மதியம் மற்றுமொரு இளம் ஜோடி மற்றும் இளைஞர் ஒருவருடன் தற்காலிக விடுதிக்கு வந்து மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
மாணவியுடன் வந்த மற்றைய ஜோடி, சிறுமியின் சடலம் கிடைப்பதற்கு சற்று முன்னர் விடுதியை விட்டு வெளியேறியதுடன், அவருடன் வந்த இளைஞனும் விடுதி அறையை விட்டு வௌியேறியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதுடன், நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.