யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30000 கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுக்கு யாழ்...
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய
திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30000 கட்டணம் அறவிடப்படும் நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் எவ்வித அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என்ற விடயம் அம்பலமாகியுள்ளது.
கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாகவுள்ளது.
எனினும், அவ்வாறான எவ்வித அனுமதிகளும் இன்றி இன்றும் நாளையும் நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் 30000 கட்டணம் அறவிடப்படும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் நாளைய தினம் இந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வருகை வந்துள்ள திரைப்பட நடிகர் நடிகைகளோடு புகைப்படம் எடுப்பதற்கும் சந்திப்பதற்கும் ஒருவருக்கு ரூபா 30000 அறவிடப்படும் என குறித்த தனியார் நிறுவனத்தினால் இரு வேறு நிகழ்வுகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக எம்மிடம் அனுமதி கோரப்படவில்லை எனவும் அவ்வாறு நடந்தால் அதற்கான கட்டணம் அறவிடப்படும் என யாழ் மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் 25000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 500 இருக்கைகளுக்கும், 7000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 1000 இருக்கைகளுக்கும், 3000 ரூபாய் அனுமதிக் கட்டணத்தில் 2000 இருக்கைகளுக்கும் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.