ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகிய இருவரும் இன்று (01) இராஜி...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகிய இருவரும் இன்று (01) இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய இந்த இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்படும் போதே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறி மஹிந்த அமரவீரவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தார்.
மஹிந்த அமரவீர நீக்கப்பட்டு வெற்றிடமாக இருந்த செயலாளர் பதவிக்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டார்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக மகிந்த அமரவீர சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்தப் பிரச்சினை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.
எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதுடன், அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட போதிலும், இந்தச் செயலாளர் பிரச்சினையால் அது தடைப்பட்டிருந்தது.